என் குரல்!
உமக்காக ஒலிக்கிறது

நான் அவனில்லை!

பெரும்பாலும் வியாதிகள் தரும் கிருமிகள் நம் உடலில் உள்ள செல்களை அழித்து அதன்மூலம் சுவை அறியக்கூடியவை. சமீகால கிருமிகள் (பன்றிக்காய்ச்சல், சார்ஸ், பறவைக்காய்ச்சல்) எல்லாம் நம் உடலிலுள்ள செல்களைப்போலவே உருவெடுத்து வந்துவிடுவதால் அல்லது உருவ மாற்றம் செய்துகொள்வதால் வெள்ளை அணுக்கள், நம் உடற்செல்கள் எது, கிருமிகள் எது என அறியமுடியாமல் போராடி நோய்வாய்பட்டு நாம் இறந்துபோக அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடியவை என அறியப்படுகிறது.

இது கிருமிகளுக்குச் சரி, ஆனால் சில மனிதர்களும் இப்படியிருப்பார்கள் என்றெண்ணியதுண்டா நீங்கள்?

நேரடியாக கருத்துக்கு வருகிறேன். கணேஷ் குமாரை நல்லவன் என்று உங்களில் எத்தனை பேர் தெரிந்துவைத்திருக்கிறீர்கள்? சரி ஒருநாள் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலோ அல்லது ஆர்குட் கிறுக்கலோ வருகிறது என்னிடமிருந்து. அதில் நான் கண்டபடி கெட்ட வார்த்தைகளால் உங்களை திட்டியோ தவறாக வர்ணித்தோ எழுதியிருந்தால் உங்கள் மனதில் நல்லவனாகப் பதிவாகியிருந்த நான் அந்த நிமிடமே கெட்டவனாக பதிவு பெற்றிடுவேன். நான் உண்மையில் நல்லவனோ கெட்டவனோ அதை விட்டுத்தள்ளுங்கள். இப்படி ஒன்று நடந்தால் என் நண்பர்கள், உறவினர்களில் எத்தனை பேரை நான் இழக்க வேண்டியிருக்கும்.

இப்படித்தான் சபரிராஜூ என்ற ஒருவனும் பலபேரிடம் கெட்டவனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான். அவனுடைய ஆர்குட் பக்கங்களைப் போலவே உருவாக்கி அவனது புகைப்படங்களையும் செய்திகளையும் அப்படியே எடுத்துப்பதித்து ஒரு எமகாதகன் விளையாடியிருக்கிறான். அவனது நல்ல ஆண் மற்றும் பெண் நண்பர்களுக்கு தகாத வார்த்தைகளால் மின்னஞ்சல், கிறுக்கல்கள் அனுப்பி உண்மைப் பெயருக்குச் சொந்தமானவனின் மானத்தைக் கப்பலேற்ற முயற்சி செய்திருக்கிறான். அதில் அவனுக்கு ஓரளவு வெற்றி என்றாலும் என்ன சுகம் அவனுக்கு அதில் கிடைக்கப்போகிறதென்று தெரியவில்லை.

இந்த நாசகாரனை ஆர்குட் நிர்வாகத்திடம் குற்றம் சாட்டினால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கையை விரிக்கிறார்கள் நிர்வாகிகள்.

எத்தனையோ இழந்துபோன பழைய நட்புக்களை நான் ஆர்குட்டின் மூலம் மீட்டுக்கொண்டேன். ஆனால் நன்மை இருக்குமளவுக்கு தீமையும் இருக்கத்தான் செய்கிறது. இருந்தபோதும் நான் ஆர்குட்டில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்துவிட்டேன்.

தொழில்நுட்பத்தை தவறாக எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என கங்கணம் கட்டிக்கொண்டு அலைபவர் இருக்கையில் முன்னேற்றம் எங்கிருந்து வரப்போகிறது. சபரியைப் போலவே உங்களில் யாரேனும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உங்கள் பெயர் கேவலம் இந்த இணைய சமூகத்தின்மூலமா கெடவேண்டும்…?

No Responses Yet to “நான் அவனில்லை!”

Leave a Reply