ஒரு வாசகரின் குமுறல்
ஒரு தனி மனிதனின் குமுறல்
என்குரல் வாசகர் திரு சக்திவேல் எழுதிய கடிதத்தை இங்கு பதிவிடுகிறேன்.
என் குரல் வலைப்பக்கத்தின் வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள்…
நம் வாழ்வில் நடக்கும் உண்மைச்சம்பவங்கள் பெரும்பாலானவை கசப்பான உணர்வுகளையே நமக்குத்தருவது இயற்கைதான். ஆனாலும் தாங்கிக்கொள்ள முடியாத பல செய்திகளும் நிகழ்வுகளும் அடிக்கடி நடப்பதால் உள்ளம் குமுறுகிறது. அந்தக் குமுறல்களின் தொகுப்பாக இந்தக் கடிதத்தை வாசகர்களுக்காக எழுதியுள்ளேன். இதன் நோக்கம் மக்களின் விழிப்புணர்வை அதிகமாக்குவதே அன்றி யாரையும் புண்படுத்துவதல்ல.
“பொதுக்காரியங்களிலே ஈடுபடுகிறவர் யாராவது தன் கவுரவத்தைப் பற்றிச் சிந்திப்பாராயின், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக்காரியத்தைப் பயன்படுத்திக்கொள்பவரே ஆவார்” -தந்தை பெரியார்.
தந்தைப் பெரியார் எவ்வளவு பெரிய கருத்தை மிகவும் எளிதாகச் சொல்லிவிட்டார். அவர் கனவு நமது சமுதாயத்தில் அடியோடு அழிந்து விட்டது.இதை அழித்தவர்கள் நம் அரசியல்வாதிகள்தான்.
பொதுக்கூட்டம் என்ற பெயரில் அவரவர் கட்சியையும் மற்றும் தனிப்பட்ட அவர்கள் கவுரவத்தைப் பெருக்கிக்கொள்ளவே முயல்கிறார்கள். அவர்கள் கட்சித்தொண்டர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களில் பலருக்கு அற்பப் பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கிறார்கள். மாநாடு என்ற பெயரில் இந்த அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே கிடையாது. சமீபத்தில் கோவையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடந்தது. அதில் அவர்கள் முன்னிருத்திப்பேசிய கருத்து என்னவென்றால் விலைவாசி உயர்வு. ஆனால் மாநாடு நடத்திய கட்சி ஆளும் கட்சியுடன் கூட்டணிவைத்துத்தான் ஆட்சி அமைத்துள்ளது. விலையுயர்வை தடுக்கவேண்டுமென்றால், அவர்கள்களால் மட்டுமே அது முடியும். ஊரை ஏமாற்ற இப்படி ஒரு நாடகம். மாநாடு ஆரம்பமான காலைநேரத்தில் ஒரு போக்குவரத்துக் காவலர்கூட சாலையில் இல்லை. எல்லாம் மாநாட்டு ஏற்பாடுகளுக்காக எடுக்கப்பட்டனர். தமிழ்நாட்டின் எல்லா ஊரிலிருந்தும் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்தெல்லாம் வாகனங்கள் கொடிகட்டியபடி கோவையில் குவிந்தன. நல்ல நாளிலேயே கோவையில் போக்குவரத்து நெரிசல் சொல்ல வேண்டியதில்லை; அன்று போக்குவரத்தின் நிலைமையினைச் சொல்லவும் வேண்டியதில்லை. காவலர்கள் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டுவிட்டு கட்சித்தலைவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கச் சென்றது அநியாயத்திலும் அநியாயம்.
பத்திரிக்கைகள் அதற்கும் மேல். முழுப்பக்க விளம்பரங்கள் செய்திகளை விழுங்கி அன்று காட்சியளித்தன. சம்பாதிக்க இதுதான் இவர்களுக்கு வழியா? விற்க வேண்டுமென்பதற்காக சின்ன விஷயங்களையெல்லாம் ஊதிப்பெரியதாக்கிய வண்ணம் இருப்பவைதான் இந்தப்பத்திரிக்கைகள். தொலைக்காட்சிஊடகமும் அப்படித்தான் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒவ்வொருவிதமான செய்திகள். மக்களுக்கு செய்திகள் கொண்டு சேர்ப்பது பொதுசேவை நிறுவனத்தின் கடமை. ஆனால் அவர்களுக்குத் தகுந்தாற்போல் செய்திகளை மாற்றிக்கொள்வது மக்களுக்குச் செய்யும் துரோகம். உண்மைச்செய்திகளை மறைத்தோ மாற்றியோ சொல்வது எவ்வளவு பெரிய குற்றம். ஆனால் அதைத்தான் இந்த தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் செய்கின்றன. அவைகளில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளின் பத்திரிக்கைகள்தான்.
பெரியாரின் கருத்தை மதிப்பதும் மதிக்காமல் போவதும் அவரவர் தனிச்சுதந்திரம்; ஆனால், கவுரவத்துக்காக, தன்னலத்துக்காக பொதுமக்களைப் பகடைகளாக்குவது என்னைப் பொறுத்தவரை மன்னிக்கமுடியாத குற்றம்.
- சக்திவேல்
Loading...
கணேஷ் ஏன் இந்த பதிவு? புரியலை… இங்கு சொல்ல பட்ட விஷயங்கள் நிதற்சன உண்மைகள். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த விஷயமும்…
bmurali80 - ஜூலை 11, 2008 at 10:55 மு.பகல்
Hai bmurali80
அதை பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு சொல்லனும் போல் தோன்றியது அவ்வளவுதான்…
இப்படிக்கு
க.சக்திவேல்
sakthi - ஜூலை 16, 2008 at 1:06 பிற்பகல்
சக்தி – சரிங்க. உங்க பதிவுல எழுத வேண்டியது தானே?
bmurali80 - ஜூலை 27, 2008 at 4:29 பிற்பகல்